17 வயது சிறுமியை கடத்திய முகமூடி நபர்கள்- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

Spread the love

குவாலியர்: 17 வயது சிறுமியை காப்பகத்தில் இருந்து முகமூடி அணிந்த 6 பேர் கடத்திச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் 17 வயது சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இந்த நிலையில் அச்சிறுமி காணாமல் போனார். அவரை கண்டுபிடித்த போலீஸார், ஜூன் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்தார். இதனால் அவரை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த சிறுமி பெண்கள் காப்பகத்தில் நீதிமன்ற உத்தரவுபடி தங்க வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 6 பேர் கொண்ட கும்பலால் அந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு பெண் காவலர், மூன்று பாதுகாவலர்கள் ஆகியோர் பாதுகாப்பில் இருந்த நிலையில் 20 நிமிடங்களுக்குள் அந்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.

காப்பகத்தில் ஊழியர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது முகமூடி அணிந்த 6 பேர் சுவர் ஏறி குதித்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். ஒரு குச்சியைப் பயன்படுத்தி காவலர் அறையில் இருந்த ஜன்னல் வழியே சாவியை எடுத்து கதவைத் திறந்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து வெளியேறும் போது ஒருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சிறுமி சென்றதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

எனவே, அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் இந்தக் கடத்தலை நடத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். கடத்தல்காரர்களுக்கு அந்த இடத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்திருந்ததால், கடத்தல் சம்பவம் திட்டமிடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த சிறுமி இதற்கு முன் இரண்டு முறை காப்பகத்தில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். மேலும், அவரது காதலன் மீது காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு ஒன்றும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours