பிரபல நடிகையும், முன்னாள் மாடலுமான சில்வினா லூனா பின்னழகு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகையும், மாடலுமான சில்வினா லூனா தனது 43வது வயதில் 2011ஆம் ஆண்டில் பிரேசிலியன் பட் லிப்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 79 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் காலமானார்.
கடந்த வியாழக்கிழமை நண்பகல் அவரை வெண்டிலேட்டரில் இருந்து அகற்ற அவரது சகோதரர் எஸேகுவேல் லூனா மருத்துவர்களுக்கு ஒப்புதல் அளித்தார். சில்வினாவின் வழக்கறிஞர் பெர்னாண்டோ பர்லாண்டோ, ’வலியும், வேதனையும் தரும் ஒரு முடிவு’ எனத் தெரிவித்துள்ளார்.
இவரது அறுவை சிகிச்சையினை ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால் லோடோக்கி செய்துள்ளார். அவர் சில்வினாவிற்கு பாலிமெதில்மெதக்ரிலேட் கொண்ட திரவத்தை செலுத்தினார். இது அர்ஜென்டினாவின் மருந்துகள், உணவு மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தின் தேசிய நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்ட ஒன்று. டாக்டர் லோடோக்கியால் 2010ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு நோயாளி 2021ல் இறந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை பெறவே சில்வினா மருத்துவமனைக்கு சென்றார். பின்பு, அவருக்கு சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் ஹைபர்கால்சீமியா இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கிடைக்கும் வரை அவருக்கு வாராந்திர டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு 2016 ஆம் ஆண்டில் அவர் மியாமிக்குச் சென்ற போது, அங்கு அவர் அர்ஜென்டினா மருத்துவர் கிரிட்ஸிடன் பெரெஸைச் சந்தித்தார். அவர் சில்வினாவின் பின்புறத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஆபத்தான பொருளை நீக்கினார்.
இது குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், ‘இது போன்ற அறுவை சிகிச்சைகளால் முதலில் நோய் எதிர்ப்பு ஏற்பட்டு, சிறுநீரக செயலிழந்து இறுதியில் நோயாளிகள் இறக்கின்றனர்’ எனக் கூறினார்.
சில்வினாவும் அப்படி பாதிக்கப்பட்டு புதிய சிறுநீரகத்திற்காக காத்திருந்தபோது, அவரது உடல்நிலை மோசமடைந்தது மற்றும் ஜூன் 13 அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வென்டிலேட்டரில் இருந்து அகற்றப்பட்டு ஜூன் 29 வரை கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். ஆனால், இந்த சமயத்தில் பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டு சில்வினாவின் நிலைமை மோசமடைந்திருக்க அவர் காலமானதை மருத்துவமனை தரப்பு தற்போது உறுதி செய்திருக்கிறது.
+ There are no comments
Add yours