உலகக் கோப்பை செஸ் சாம்பியன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் இரு சுற்று ஆட்டங்களும் சமனில் முடிவடைந்ததால், டை-பிரேக்கர் மூலம் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய ஆட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பிரக்ஞானந்தாவுடன் நடைபெற்ற டை பிரேக்கர் முதல் சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இரண்டாவது சுற்று ஆட்டத்திலும் கார்ல்சன் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சென்னையைச் சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வி அடைந்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கும் 91 லட்சம் ரூபாயும், தோல்வி அடைந்த பிரக்ஞானந்தாவுக்கு 67 லட்சம் ரூபாயும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகச் செஸ் சாம்பியன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, இந்தியர்கள் அனைவர் மனதிலும் இடம்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறந்த விளையாட்டுக்கு மனமார்ந்த வாழ்த்தக்களை தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் பெரும் புகழை அவர் பெற வேண்டும் என்றும் குடியடிரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதாகவும், கார்ல்சனுக்கு கடும் நெருக்கடியை அவர் கொடுத்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சிறப்பான ஆட்டத்தைக்கண்டு, தேசம் பெருமையடைவதாகவும், இனி வரவிருக்கும் போட்டிகள் பிரக்ஞானந்தாவுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தாலும், பிரக்ஞானந்தா புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்தியாவை மட்டுமல்லாமல், வெளிநாடு வாழ் இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours