தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோதி, பெங்களூருவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினரை இன்று காலை நேரில் சந்தித்து சந்திரயான்-3 சாதனைக்காக பாராட்டு தெரிவித்தார்.
தென்னாப்பிரக்கா மற்றும் கிரீஸ் பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் தாயகம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை நேரடியாக பெங்களூரு வந்தடைந்தார். பெங்களூரு எச்.ஏ.எல் விமானநிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய பிரதமர், அதிகாலை வேளையில் தன்னைக்காண வருகை தந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
அறிவியல் மீது நம்பிக்கை கொண்ட உலக மக்கள் அனைவரும் சந்திரயான்-3 சாதனை பயணத்தை வியப்புடன் கொண்டாடுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, விமானநிலையத்தில் இருந்து பீன்யாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை வரை, கார் கதவின் அருகே நின்றபடி பிரதமர் நரேந்திர மோதி சாலையில் பேரணியாக சென்றார். சாலையின் இரு புறமும் கூடியிருந்த மக்கள் தேசியக்கொடியை அசைத்தவாறு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு பிரதமரும் கை அசைத்தபடி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற பிரதமருக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சந்திரயான்-3-ன் செயல்பாடுகளை சோம்நாத், செயல் விளக்க மாதிரிகளுடன் பிரதமருக்கு விளக்கினார். தொடர்ந்து, சந்திரயான்-3 சாதனை பயணத்திற்கு வித்திட்ட இஸ்ரோ குழுவினரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று அழைக்கப்படும் எனவும், சந்திரயான்-3 நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி நாளாகக் கொண்டாடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போதைய பாரத தேசம், கடின உழைப்பிற்கு பெயர் பெற்றிருப்பதாக கூறிய பிரதமர், நிலவில் கால்பதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இஸ்ரோ விஞ்ஞானிகள், நாட்டிற்கு பெருமை தேடி தந்திருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சி பாதையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பங்கும் அற்பணிப்பும் அளவுகடந்த ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours