பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்நாட்டு கல்லூரிகளில் பயிலும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த மாணவர்களுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது இந்திய மாணவர்களின் பல்வேறு அரசியல் கேள்விக்கு ராகுல் காந்தி தனது பதில்களை கூறினார்.
பாரதம் எனும் பெயர் மாற்றம் குறித்து பேசுகையில், பாரதம் – இந்தியா என என்ன பெயர் வைத்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் இரண்டுமே ஒன்றுதான். ஆனால் நாங்கள் எங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்த காரணத்தாலேயே, பாஜகவினர் பாரதம் எனும் பெயரை வைத்து, இந்தியாவின் பெயரையே மாற்ற நினைக்கின்றனர் என்று விமர்சித்தார். மேலும் இந்தியாவின் ஆன்மாவை பாஜகவினர் சிதைக்க நினைக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, பாஜகவின் கொள்கையில் இந்து மத கொள்கை என்று எதுவும் இல்லை. நான் பகவத்கீதை படித்துள்ளேன். அதன்படி பார்த்தால் எந்த இந்து மத நூலிலும் தங்களை விட வரியவர்களை துன்புறுத்த சொல்வதில்லை. ஆனால், பாஜகவினர் அப்படி நடந்து கொள்கிறார்கள். பாஜகவினர் இந்து தேசியவாதிகள் அல்ல அவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பாஜகவின் கொள்கையில் இந்து சித்தாந்தம் இந்து அடையாளம் எதுவுமே இல்லை என்று தனது விமர்சனத்தை முன் வைத்தார் ராகுல் காந்தி.
பாஜகவினர் சிறுபான்மையினரின் பங்களிப்பை இந்தியாவில் முடக்க பார்க்கிறார்கள். அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அத்தகைய இந்தியா எங்களுக்கு வேண்டாம். தங்கள் சொந்த தேசத்தில் சிறுபான்மை இன மக்கள் அசவுகரியமாக உணர்கிறார்கள் என்றால் அது நமது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம். அது நம் அனைவருக்கும் ஏற்பட்ட அவமானம் இதனை சரி செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி பேசினார்.
+ There are no comments
Add yours