18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.
அவருடன் 71 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. அதில், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களும் பதவியேற்றனர்.
பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், நேற்று அவர்களின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவியும், ஜெய்சங்கருக்கு வெளியுறுவுத்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாஜகவின் தேசிய தலைவராக இருந்த ஜெ.பி.நட்டாவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையில் ஜெ.பி.நட்டா இருக்கும் பட்சத்தில், பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார் இருப்பார் என கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் பொறுப்புக்கு முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் தர்மேந்திர பிரதான் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஆனால், இவர்கள் இரண்டு பேரும் தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இதனால், இவர்களால் இரண்டு பதவிகளில் இருக்க முடியாது.
பாஜக சட்டப்படி இரண்டு பொறுப்புகளில் ஒருவர் நீடிக்க முடியாது என்பதால் இவர்களுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படாது. இவர்களை தவிர மேலும் நான்கு பெயர்களை தேசிய தலைவர் பதவிக்கு கட்சிக்கு வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதாவது, வினோத் தாவ்டே, அனுராக் தாக்கூர், சுனில் பன்சால், ஓம் பிர்லா ஆகியோரின் பெயர் அடிப்படுகிறது. எனவே, இவர்களில் ஒருவர் பாஜகவின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours