T20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்க அணி !

Spread the love

டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் துவக்காட்டக்காரர் குவிண்டர் டி காக் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ், மார்க்ரம், ஸ்டப்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் களமிறங்கிய கிளாசன் மற்றும் மில்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து அந்த அணி 113 ரன்களை எடுத்திருந்தது. வங்கதேசம் தரப்பின் அசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணியும் ரன்களை சேகரிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த நிலையில் தவ்ஹீத் ஹிரிடாய் மற்றும் மஹ்மத்துல்லா இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.

இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேசவ் மகராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரபாடா, அன்றிச் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours