சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் கொருக்குப்பேட்டையில் நேற்று முன்தினம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருள்கள் பெறுவதற்காக ஏராளமானோா் வரிசையில் காத்து நின்றனா். அதில், நிவாரண பொருட்கள் வாங்க வந்த தண்டையாா்பேட்டை சாஸ்திரி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த யுவஸ்ரீ (14) என்ற சிறுமி ஒருவர் காத்திருந்தாா்.
நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து சென்றுவிட்டார். அப்போது, நிவாரண பொருட்கள் வாங்க கூட்ட நெரிசலில் வரிசையில் நின்றிருந்த சிறுமி திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது தொடா்பாக ஆர்கே நகர் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி வழங்கிய நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த 14 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்தது. ஆனால், மூச்சு திணறியோ, மிதிப்பட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை என பிரேத பரிசோதனையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், சென்னை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக நாளை மறுநாள் ஆர்டிஓ விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours