
சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடல் ஒப்படைப்பு. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் புடைசூழ சென்னை – பெரம்பூர் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கட்சி அலுவலகத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று காலை நடைபெறுகிறது. இதனை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கிறார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திரண்ட அவரது ஆதரவாளர்கள் ‘வீரவணக்கம்’, ‘ஜெய் பீம்’ என முழக்கமிட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, திருநின்றவூரைச் சேர்ந்த மூவர், காட்பாடியைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) ஆஸ்ரா கர்க், தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இதில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது,
“கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது அரசியல் காரணங்களுக்கான கொலை இல்லை. அதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. அவர் ஆரம்ப வாழ்க்கையில் இருந்து அரசியலுக்கு வந்த பிறகு, சில நேரங்களில் அவருக்கு பிரச்சினை இருந்துள்ளது. அரசியல் காரணங்கள் தாண்டி, குழு ரீதியான பிரச்சினை இருந்துள்ளது. எனவே, அந்தக் கோணத்தில்தான் நாங்கள் விசாரித்து வருகிறோம். அரசியல் காரணங்களுக்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது” என்றார்.
+ There are no comments
Add yours