விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாள் நூற்றாண்டினைபெட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு இம்மானுவேல் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours