நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அங்கு 230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தற்போது மொத்தம் 949 பேர் அங்கு சிகிச்சையில் உள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம், கேரளாவை ஒட்டி இருக்கக்கூடிய தமிழக எல்லை மாவட்டங்களிலும் கொரோனா பரவக்கூடும் என்பதால் எல்லை மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours