இந்தியாவில், எந்தவொரு மதச் சிறுபான்மையினருக்கும் எந்தப் பாகுபாடும் காண்பிப்பதில்லை. இஸ்லாமியர்களின் எதிர்காலம் குறித்த கேள்விக்குப் பதில், எங்கள் நாட்டின் வளர்ச்சிதான். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழ்கின்றனர்
டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “இந்தியாவில், எந்தவொரு மதச் சிறுபான்மையினருக்கும் எந்தப் பாகுபாடும் காண்பிப்பதில்லை. இஸ்லாமியர்களின் எதிர்காலம் குறித்த கேள்விக்குப் பதில், எங்கள் நாட்டின் வளர்ச்சிதான். பாகுபாடு காட்டுவதாக இருந்தால், இந்த அளவுக்கு நாடு முன்னேறியிருக்காது.
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பும், எதிர்ப்பும் அதிகரித்து வருவதாக உலக நாடுகளின், உள்நாட்டு ஊடகங்களின் விமர்சனங்களை நான் நிராகரிக்கிறேன். ஏனென்றால், இந்தியச் சமூகமே எந்த மதச் சிறுபான்மையினருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை. இந்தியாவில் வசிக்கும் மத சிறுபான்மையினரில் பார்சி இன மக்கள், உலகில் பிற இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளான போதிலும், அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழ்கின்றனர்” என்றார்
தொடர்ந்து பேசிய அவர், “அரசை விமர்சிப்பவர்கள் மீது அடக்குமுறைகள் நடப்பதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நம் நாட்டில் உள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும், தலையங்கங்கள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கள், வீடியோக்கள், ட்வீட்கள் போன்றவற்றின் மூலம்தானே இந்த குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வீசுகிறார்கள். அதற்கான வாய்ப்பும், சூழலும் இன்றும் இருக்கிறது… எதிர்க்கட்சிகள் பாஜக அமைச்சர்களை “டூல்கிட், துக்டே துக்டே” எனக் கூறி கேலி செய்கிறார்கள். அவ்வாறு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.
அதே நேரம் அதற்குப் பதிலளிக்க மற்றவர்களுக்கும் சம உரிமை உண்டு. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது சாத்தியமானது, எனது அரசு நீண்டகால மதச்சார்பற்ற, ஜனநாயக மரபுகளைப் பின்பற்றியது தான்.
நீங்கள் முன்னிலைப்படுத்திய பிரச்னைகள் பரவலாக இருந்தால், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்திருக்காது. இந்தியா மீதான இதுபோன்ற சிந்தனைகள், இந்திய மக்களின் அறிவுத்திறனை அவமதிப்பது மட்டுமல்லாமல், பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகம் போன்ற எங்களின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன” என கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours