கர்நாடக அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் கோவா அணியை அவர் வெற்றி பெற செய்துள்ளார்.
கேஎஸ்சிஏ இன்விடேஷனல் போட்டியில் மாநில அணிகளான கர்நாடகா மற்றும் கோவா விளையாடின. இதில் இரண்டு இன்னிங்ஸில் மொத்தமாக 26.3 ஓவர்களில் 87 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை அர்ஜுன் டெண்டுல்கர் கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி 36.5 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து சுருண்டது.
முதல் இன்னிங்ஸில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன், 13 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய கோவா அணி, 413 ரன்களை குவித்தது. அபினவ் தேஜ்ரனா சதம் விளாசினார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய கர்நாடகா அணி, 30.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 189 ரங்களில் கோவா வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை அர்ஜுன் கைப்பற்றி இருந்தார்.
இது எதிர்வரும் முதல் தர கிரிக்கெட் சீசனுக்கு சிறந்த பயிற்சியாக அவருக்கு அமைந்துள்ளது. 24 வயதான அவர், சீனியர் அளவில் இதுவரை மூத்த மட்டத்தில் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் மொத்தமாக 49 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 13 முதல் தர ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
+ There are no comments
Add yours