பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமனம்

Spread the love

மும்பை: ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் பயணித்த பிறகு இப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவர் இரண்டு ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மற்ற பயிற்சியாளர்களை ரிக்கி பான்டிங்கிடம் கலந்தாலோசித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுக்கும்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ட்ரிவர் பெய்லிஸ் இருந்தார். கிரிக்கெட் மேம்பாட்டு தலைமை பொறுப்பில் சஞ்சய் பாங்கரும் வேகப்பந்து கோச்சாக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பவுலர் லாங்கிவெல்ட்டும் ஸ்பின் கோச் ஆக சுனில் ஜோஷியும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 2024 ஐபிஎல் சீசனில் படுமோசமாக வீழ்ந்த்து 9-ம் இடத்தில் முடிந்தது பஞ்சாப் கிங்ஸ். 2014-க்குப் பிறகே பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ல் ரன்னர்களாக முடித்தனர். இந்த ஆண்டு எந்தெந்த வீரர்களைத் தக்கவைப்பது என்பது உட்பட பாண்டிங் முடிவெடுப்பார். இது அவருக்கு ஒரு பெரிய சவாலே.

கடந்த தொடரில் ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட் ஹர்ஷல் படேல், ஷஷாங்க் சிங், அசுடோஷ் ஷர்மா ஆகியோர் சிறப்பாக ஆடியுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்டராக ஜிதேஷ் சர்மா, இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் ஆகியோரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாவர். ராகுல் சஹாரும் இருக்கிறார், இவர்களோடு சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்டோ, கேகிசோ ரபாடா ஆகியோரைக் கொண்ட நல்ல அணியாகவே பஞ்சாப் கிங்ஸ் உள்ளது.

ஷிகர் தவான் ரிட்டையர் ஆகிவிட்டதால் பாண்டிங் ஒரு நல்ல கேப்டனையும் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. 2018-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சிப்பொறுப்பை ஏற்ற ரிக்கி பாண்டிங் அந்த அணியை மூன்று முறை தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறச் செய்ததில் பெரும் பங்காற்றினார். 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் இறுதிக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours