=
கடந்த 4-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 23 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் 3 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை விடுவிக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றவர்களிடம் ஆட்சியர் அளித்த உத்தரவாதத்தின் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்று கைது செய்யப்பட்ட 19 மீனவர்களில் ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒரே வாரத்தில் 4 வது மீனவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 படகுகள் அரசுடைமையாக்கப் பட்டுள்ளதும் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கச்சத்தீவில் நடைபெற்று வரும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையும் தமிழக மீனவர்கள் புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவுக்கு வந்துள்ள இலங்கை மீனவர்கள், கச்சத்தீவுக்கு வருமாறு ராமேஸ்வரம் மீனவர்களை அழைத்துள்ளனர். அங்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கலாம் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இன்று காலை புனித அந்தோணியார் ஆலய திருவிழா முடிந்தவுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் வந்தால் அங்கு வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இதனை ராமேஸ்வரம் மீனவர்கள் ஏற்கவில்லை. அவர்களின் அழைப்பை புறக்கணித்துள்ளனர்.
மத்திய அரசு தலையிட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்பது ராமேஸ்வரம் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
+ There are no comments
Add yours