சாத்தூர் அருகே பனையப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (36) என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து சம்பவங்களும், அதனால் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையப்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் வேலை செய்து வந்தார். வழக்கம் போல இன்று காலை அவர் வெடி மருந்து கலக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்தில் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்த நிலையில் அவர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours