இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் அதிகளவில் காய்கறி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.
பொதுவாக அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் ஆனால் இந்த வருடம் கோடைக்காலத்தில் பெய்த கனமழை விவசாயத்தைப் பாதித்துள்ளது. காய்கறிகள் விளைச்சல் அதிகம் பாதிக்கப்பட்டன.
அதேபோல் வரும் நாட்களில் அடுத்தடுத்து சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் காய்கறிகள் தேவையும் அதிகரிக்கும். இந்நிலையில் திண்டுக்கல் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை திடீரென உயரத் துவங்கியுள்ளது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காந்தி மார்க்கெட் வியாபாரி தாஸ் கூறுகையில், “பருவநிலை மாற்றத்தால் வெயில் தேவைப்படும் நேரம் மழை பெய்ததால் செடிகளிலுள்ள பூக்களும் பிஞ்சுகளும் சேதமடைந்துவிட்டன. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் நாட்டுக் காய்கறிகளின் வரத்து குறைந்துவிட்டது.
திருநெல்வேலி, தென்காசி, மதுரை போன்ற பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
60 ரூபாய்க்கு விற்பனையான மிளகாய் தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பள்ளி விடுதிகளுக்கும், திருமண விஷேசங்களுக்கும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்ப காய்கறிகள் வரத்து இல்லாததால் காய்கறிகளில் விலை குறைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து வரத்து குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஆகும் போக்குவரத்து செலவுகளையும் சேர்த்து காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் 30 நாட்களுக்கு இதே போல் தான் விலைவாசி காணப்படும் என தெரிவித்தார்.
+ There are no comments
Add yours