திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இன்று காலை முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் நகரின் பல்வேறு இடங்களிலும், அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி, 30,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் 30 முதல் 50 செ.மீ மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது தாமிரபரணியில் அதிகமக வெள்ளம் வருவதால் தாமிரபரணி, நம்பியார், கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட கால்வாயில் இன்று மாலை 4 மணிக்கு அம்பை சாலை வெள்ளாங்குழியில் முதல்வரின்ன் உத்தரவுக்கிணங்க வெள்ளோட்டம் பார்க்கும் வகையில் மழை வெள்ள உபரி நீர் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் சூழந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours