தெலுங்குக்கு ‘பாகுபலி’ படம் போல, தமிழுக்கு ‘அயலான்’ திரைப்படம் என அதன் தயாரிப்பாளர் கோட்பாடி ராஜேஷ் பேசியுள்ளார்.
ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோட்பாடி ராஜேஷ் விழாவில் பேசியதாவது, “தெலுங்கில் ‘பாகுபலி’ படம் எப்படி ஒரு பென்ச்மார்க்காக அமைந்ததோ, அதுபோலவே தமிழில் ‘அயலான்’ திரைப்படமும் ஒரு பென்ச்மார்க்காக அமையும். இந்தப் படத்தின் டிரெய்லர் வருகிற ஐந்தாம் தேதி வெளியாகும். இது நிச்சயம் ‘அயலான்’ பொங்கல்தான். சிஜி விஷயங்களில் இந்தப் படம் முன்மாதிரியாக இருக்கும்” என்றார்.
அதேபோல, “’அயலான்’ திரைப்படம் ஏற்கெனவே ஒரு பிளாக் பஸ்டர். நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள். போதை மருந்து, ரத்தம் படிந்த மேக்கப் கொண்ட முகங்கள் போன்றவற்றை நம்புவர்கள் அல்ல” என்று பேசி மறைமுகமாக ‘லியோ’, ‘ஜெயிலர்’ படங்கள் குறித்துப் பேசியுள்ளார். இதற்கடுத்துப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், படம் மீதிருந்த அதீத நம்பிக்கைக் காரணமாகவே தயாரிப்பாளர் ‘பாகுபலி’யுடன் ஒப்பிட்டு பேசினார் என்றும் தனக்கும் அவர் பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறினார்.
+ There are no comments
Add yours