‘சாமானியன்’ படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பாளர் போதிய ஆதரவு தரவில்லை என நடிகர் ராமராஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ’சாமானியன்’ படம் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார் நடிகர் ராமராஜன். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை புரோமோட் செய்வதற்காக நடிகர் ராமராஜன் திரையரங்குகளுக்கு நேரிடையாக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் ஒன்றில் தனது ரசிகர்களை சந்தித்தார். ராமராஜனை பார்த்த அவரது பெண் ரசிகைகள் உற்சாகமடைந்தனர். அவர்களுடன் படம் குறித்து உரையாடிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் எளிய மக்களுக்கான பொழுதுபோக்கு சினிமா. அதனால், திரையரங்க உரிமையாளர்கள் சினிமா கட்டணத்தைக் குறைக்க முன்வர வேண்டும். 35 வருடங்களுக்கு முன்பு ‘கரகாட்டக்காரன்’ படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதேமாதிரியான வரவேற்பு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருப்பது மகிழ்ச்சி.
’சாமானியன்’ படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஏனெனில், படத்திற்கு சரியான விளம்பரம் கொடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை. ஆபரேஷன் சக்சஸ் என்று சொல்லிவிட்டு நோயாளியை தயாரிப்பாளர் கொன்று விட்டார். இதையும் மீறி மக்கள் படம் பார்க்க வருகிறார்கள் என்றால் அது ராமராஜனுக்காகதான். மக்கள் என்னை இன்னும் மறக்காமல் இருக்கக் காரணம் இளையராஜா தான்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours