பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது- தப்பி ஓட முயன்ற போது வலது கையில் எலும்பு முறிவு

Spread the love

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 7 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த மினி லார் ஓட்டுநர் காளிகுமார் (33) நேற்று முன்தினம் திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்காக இவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று வைக்கப்பட்டிருந்து. அப்போது அங்கு கூடிய காளிகுமாரின் உறவினர்கள், கொலையாளிகளை உடனே கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய அருப்புக்கோட்டை டிஎஸ்பி-யான காயத்ரியை சிலர் தாக்கினர். இச்சம்பவம் அருப்புக்கோட்டையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்பி-யான கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். டிஎஸ்பி-யான காயத்ரி தாக்கப்பட்டது தொடர்பாக, நெல்லிக்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன், முத்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசன், பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த பொன்முருகன், ஜெயராமன், சாய்குமார், பாலாஜி, அம்மன்பட்டியைச் சேர்ந்த சூரியா, காளிமுத்து ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று காலை கைது செய்யப்பட்டார். அவர் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours