சென்னையில் போலி ஐபோன்கள் விற்பனை

Spread the love

சென்னை: சென்னை ரிச்சி தெருவில் போலி ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை செய்ததாக 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

சென்னை சூளைமேடு சங்கரியார் காலனியைச் சேர்ந்தவர் குமாரவேல் (49). இவர் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆப்பிள் ஐபோன்கள் போன்று போலியான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் கடைகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, குமாரவேல் பணிபுரிந்து வரும் நிறுவனத்துக்கு ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆப்பிள் ஐபோன்கள் போன்று போலியான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து காவல் துறையிடம் குமாரவேல் ஒப்படைத்து வருகிறார். இந்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் ஆப்பிள் ஐபோன்கள் போன்று போலியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குமாரவேலுக்கு தெரியவந்தது. இது குறித்து, சிந்தாதிரிப்பேட்டை போலீஸில் அவர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆப்பிள் ஐபோன்கள் போன்று போலி பொருட்களை ரிச்சி தெருவில் விற்பனை செய்ததாக லட்சுமண்குமார் (27), உமேத் (28), கிஷோர் (22), ரவீந்தர் (35), அர்ஜூன் (22), இந்தர்சிங் (22) ஆகிய 6 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ஹிரோசிங், ரமேஷ்பூரி, ராஜ்குமார் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours