சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் போதைப்பொருட்களை விற்பனை செய்த 3 நைஜீரியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைப் அண்ணாநகர் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரித்தும் வந்தனர்.
இந்நிலையில், செனாய் நகர் பகுதியில் கொக்கைன் பயன்படுத்திய ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த சொகுசு பார்ட்டியில் அறிமுகமான நைஜீரியர்கள் மூலமாக கொக்கைன் போதைப்பொருள் தனக்குக் கிடைத்ததாக தெரிவித்துள்ளார் அந்த நபர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீஸார், மணிமங்கலம் அருகே ஒரு வீட்டில் இருந்து கொக்கைன் போதைப்பொருள் சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது.
உடனடியாக, அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான, 1 கிலோ கொக்கைனைக் கைப்பற்றினர். அந்த வீட்டில் இருந்த சினெடு ஒனோச்சு என்ற நைஜீரியரையும் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பள்ளிக்கரனையில் தங்கியிருந்த அவரது கூட்டாளிகளான அமேஸ் சீயோன், எஸ்மெல்சியா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கிராம் கொக்கைனை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை இவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் கொக்கைனை வெளிநாட்டில் இருந்து பெங்களூரு வழியாகக் தமிழகத்துக்குக் கடத்தி வருவதும் தெரியவந்தது.
யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக 3 பேரும் சென்னைக்கு வெளியே முடிச்சூரில் பழைய வீடு ஒன்றை எடுத்து, அங்கிருந்து கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் அம்பலமானது.
இந்தக் கும்பல் கடந்த 5 ஆண்டுகளாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது. இவர்கள் அனைவரும் சினிமாவிலும் துணை நடிகர்களாக நடித்து வந்ததும், பல சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் சப்ளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours