மதுரை எம்.கே. புரத்தைச் சேர்ந்த 78-வது வார்டு திமுக வட்ட செயலாளர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை எம்.கே. புரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் 78-வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திமுகவில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. சனிக்கிழமை நள்ளிரவு வழக்கம்போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து அவரின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே திருமுருகன் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? உறவினர்களா அல்லது அரசியல் முன் விரோதம் ஏதேனும் இவருக்கு உள்ளதா? போன்ற கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours