இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் செங்கடல் வர்த்தகத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக நிற்கும் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படை மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறது. செங்கடலில் நுழையும் சரக்கு கப்பல்களை நோட்டமிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளின் கொடிகளுடன் வந்தால் சிறிதும் தயக்கமின்றி தாக்கி விடுகின்றன.
செங்கடல் தாக்குதல்
இதனால் கோபமடைந்த அமெரிக்க, இங்கிலாந்து படைகள் ஹவுதி படைகளின் முகாம்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இருப்பினும் ஹவுதி கிளர்ச்சி படைகள் அச்சம் கொள்ளவில்லை. யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று பீஸ்ட் மோடில் செங்கடலில் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றனர். ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கடல் வழி வர்த்தகத்திற்கு செங்கடல் மிகவும் எளிதாக இருக்கிறது.
இந்தியாவின் வர்த்தகம்
எனவே ஆசிய நாடுகள் மீண்டும் இயல்பு நிலை திரும்பி விடாதா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றன. இதில் இந்தியாவும் அடங்கும். ஏனெனில் இந்தியாவில் இருந்து 50 சதவீத கடல் வழி ஏற்றுமதியும், 30 சதவீத கடல் வழி இறக்குமதியும் செங்கடல் வழியாக தான் நடைபெறுகின்றன. இதனால் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் கைவைத்து விடுவார்களோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது. உலகிலேயே பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் நம்பர் ஒன் நாடாக இந்தியா திகழ்கிறது.
கடல் வழி பொருளாதாரம்
இங்கிருந்து தான் மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே சரக்கு வரி, காப்பீடு பிரீமியம், கண்டெய்னர்கள் பற்றாக்குறை, பல மாதங்கள் போக்குவரத்து என அதிக செலவு செய்யும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக சரக்கு வரி மட்டுமே 5 மடங்கு ஏறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலையையும் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்
மறுபுறம் அதிக விலை கொடுத்து வாங்க வெளிநாடுகள் மறுத்து வருகின்றன. அதற்கு மாற்று ஏற்பாடுகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதுதவிர ஆப்பிள், சிட்ரஸ் வகை பழங்கள் உள்ளிட்டவை ஒவ்வொரு மாதமும் 500 கண்டெய்னர்களில் கேரளாவிற்கு வருகின்றன. இந்த இறக்குமதி செங்கடல் வழியாக வரும் கப்பல்கள் மூலம் தான் நடைபெறுகின்றன.
துறை வாரியான பாதிப்பு
மேலும் சவுதி அரேபியாவில் இருந்து டி.ஏ.பி, ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து ராக் பாஸ்பேட், ஜோர்டானில் இருந்து பாஸ்போரிக் அமிலம் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போதைய சூழலில் விவசாயப் பொருட்கள், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் பெரிய சிக்கலில் ஆழ்ந்துள்ளது. டெக்ஸ்டைல், கெமிக்கல், கேபிடல் குட்ஸ் ஆகியவை ஒருவழியாக சமாளித்து வருகின்றன. பார்மா, மெட்டல்ஸ், ஃபெர்டிலைசர்கள் பெரிதாக பாதிக்கப்படவில்லை.
+ There are no comments
Add yours