இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது.

Spread the love

கொழும்பு- இலங்கையில் அதிபராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையில் அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தல் வேண்டும். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். மூன்றாவது முறையாக இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அதிபராக பதவி வகிக்க முடியாது. மேலும், அதிபர் அரசின் தலைவராகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவும், முப்படைகளின் தலைவராகவும் இருப்பார்.

இலங்கையில் 1978-ம் ஆண்டு அதிபர் ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு முதல் அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்தன 1982-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 1988-ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசவும், 1994 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் சந்திரிகா குமாரதுங்கவும், 2005 மற்றும் 2010 ஆண்டுகளில் மகிந்த ராஜபக்சவும், 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபால சிறிசேனாவும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் 52 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கோத்தபய ராஜபக்ச.

ஆனால், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 22.07.2022 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் நிறைவடைவதால், அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் முன்னமே அறிவித்திருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 21 அன்று அதிபர் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15-ல் துவங்க உள்ளது. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடப் போவதாக முன்பே அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours