அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கும், ஆளும் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகளுக்கு தொடர்பும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை வழங்கலில் தேர்தல் பத்திரம் நடைமுறையை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் விவரத்தை முழுமையாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடுமாறும் உத்தரவிட்டது. சற்று இழுபறிக்குப் பின்னர் எஸ்பிஐ வங்கி சமர்பித்த தேர்தல் பத்திரங்கள் தேசத்தில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
ஆளும் கட்சியான பாஜகவுக்கு அதிகளவு நிதி குவிந்ததோடு, அதன் பின்னணியிலான காரண காரிய விளைவுகளை எதிர்க்கட்சிகள் கேள்விக்குள்ளாக்கின. அதாவது சர்ச்சைக்குரிய நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை ரெய்டு பாய்வதும், அந்த அழுத்தத்திலிருந்து தப்பிக்க அந்த நிறுவனங்கள் அடுத்த சில தினங்களில் பாஜகவுக்கு பலகோடி தேர்தல் பத்திரங்களை வழங்கி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த வகையில் மிகப்பெரும் ஊழல் மோசடி நடந்திருப்பதாகவும், அவற்றை விசாரிக்க உயர்மட்டக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. பொதுவெளியிலும் மத்தியிலும் தேர்தல் பத்திரங்களை முன்வைத்து நடக்கும் அரசியல் நாடகங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நேற்றைய தினம் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவகாரம் சர்ச்சையானதில், அது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
ஊடக விழா ஒன்றில் இன்று பங்கேற்ற நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறைக்கும், ஆளும் கட்சிக்கு சேர்ந்த பல்லாயிரம் கோடி நன்கொடைகளுக்கும் இடையிலான தொடர்பை அடியோடு மறுத்தார். “அமலாக்கத்துறை ரெய்டு உள்ளிட்ட அழுத்தங்களை கொடுத்ததே, நிறுவனங்கள் ஆளும் கட்சிக்கு நன்கொடை வழங்கியதாக கூறுகிறாகள். இவை அத்தனையும் அவர்களின் அனுமானங்களே அன்றி உண்மையல்ல” என்றார்.
தொடர்ந்து பேசும்போது “இதிலிருந்து கற்றுக்கொள்வது நமது முயற்சியாக இருக்க வேண்டும். அரசியல், நிதி தொடர்பான சட்டம் ஏதேனும் வரும்போதெல்லாம், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இந்த பாடங்கள் உதவும். அப்படி நம்மை மேம்படுத்திக்கொள்ளும்போது ஒவ்வொரு புதிய அமைப்பும் முந்தையதை விட சிறப்பாக இருக்கும்,” என்று அவர் கூறினார். தேர்தல் பத்திர திட்டம் சரியான அமைப்பு அல்லாது இருக்கலாம்; ஆனால், முந்தையதை விட சற்றே மேம்பட்டது” என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
+ There are no comments
Add yours