மசோதாக்களை அவசரமாக நிறைவேற்றாமல், அவையில் முறையான விவாதங்களுக்கு பின்னர் நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “தயவுசெய்து அவசரமாக மசோதாக்களை நிறைவேற்ற வேண்டாம். மசோதாக்கள் முறையான விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டால், சட்டங்களில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றைச் சரிசெய்ய பின்னர் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலவையில் முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான நேரம் வழங்கப்படாதது கவலை அளிக்கிறது.
கடந்த 2004 – 2014 காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்காலத்தில் நாடு அதிக வளர்ச்சியை அடைந்தது. உணவுச் சட்டம், தகவல் அறியும் உரிமை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சட்டங்கள் தனது பதவிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டதற்காக மன்மோகன் சிங் நினைவுகூரப்படுவார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட நல்ல பணிகளைப் பாராட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
+ There are no comments
Add yours