இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் 4 ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
இந்நிலையில் இக்கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட 14 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். எனினும், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. மம்தா பானர்ஜி ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்று உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். அவர், ‘இது சம்பந்தமாக எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது. நான் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இது போன்ற ஒரு சூழ்நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்வது கடினமாக இருக்கும். கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்பது குறித்து ஏற்கனவே தெரிவித்து விட்டேன்” என கூறினார்.
இன்று நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
+ There are no comments
Add yours