ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்து கோயிலை இடித்துவிட்டு அப்பகுதியில் மசூதி கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி, அலகாபாத் உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ‘மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993-ம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை கடந்த ஜன.31ம் தேதி விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்தும், வழிபாடு நடத்துவதற்கான அர்ச்சகரை நியமிக்கவும், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ‘ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பாக மசூதி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
+ There are no comments
Add yours