ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு!

Spread the love

அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த போது, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது போல், தனக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு தடை விதிக்க கோரி அவர் தாக்கல் செய்த மனு கோடைகால நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கீழமை நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருப்பதை மறைத்து உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிமன்றம், ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்களிடம் கடும் கண்டனம் தெரிவித்தது. ”உங்களின் செயல்பாடுகள் நிறைய விஷயங்களை சொல்கிறது. ஹேமந்த் சோரன் தரப்பு நேர்மையுடன் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் நீங்கள் முக்கிய உண்மைகளை தவிர்த்து விட்டீர்கள்” என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஹேமந்த் சோரன் தரப்பு திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறினர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours