பெங்களூரு குண்டனஹல்லி பகுதியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபேவில் நேற்று மதியம் மர்ம பெருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அது குண்டுவெடிப்பு என உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகளும் போலீசாரும் ஆய்வு நடத்தினர். பெங்களூரு உணவகத்தில் நிகழ்ந்தது குண்டு வெடிப்புதான் என்பதை அம்மாநில முதல்வர் சித்தராமையா உறுதி செய்தார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கர்நடாக முதல்வர் சித்தராமையா, இன்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிடைத்த தகவலின்படி, உணவகத்தில் யாரோ ஒருவர் பையை வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தார்.
மேலும், அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பயங்கரவாத செயல் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுதான் முதல்முறை. முகமூடி, தொப்பி அணிந்து பஸ்ஸில் வந்த நபர்தான் பையை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
டைமர் செட் செய்து குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்யக் கூடாது. மங்களூரு குண்டுவெடிப்பிற்கும், பெங்களூரு குண்டுவெடிப்பிற்கும் தொடர்பில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவி செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours