கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் ’நிபா வைரஸ்’ தொற்று இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிபா வைரஸ் தோற்று காரணமாக, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது
இருவரும் உயிரிழந்ததற்கு நிபா வைரஸ்தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் வெளியிட்ட வீடியோ செய்தியில், “மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவனமாக இருப்பது நிலைமையைச் சமாளிக்கத் தேவையான வழியாகும். சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.” எனக் கூறினார்.
மேலும், இறந்தவர்களில் ஒருவரின் உறவினர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாவட்டத்திலும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்படும் வசதியையும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours