நீட் குளறுபடிகள்.. தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றம் !

Spread the love

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

தலைவர் (இயக்குநர் ஜெனரல்) பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுபோத் குமார் கட்டாய காத்திருப்பில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாக தகவல். தேசிய தேர்வு முகமையின் நிரந்தர தலைவரை நியமிக்கும் வரையில் பிரதீப் சிங் கரோலா அந்தப் பொறுப்பை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வினாத்தாள் கசிவு, தேர்வு முறையில் முறைகேடு, கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண் போன்றவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதில் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும். அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள் நீட் மறுதேர்வு வேண்டும் என போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அந்தத் தேர்வை மத்திய அரசே ரத்துசெய்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 18-ம் தேதி இந்த தேர்வு நடைபெற்றது. யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் கிடைத்திருப்பதாகக் கூறி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் வினாத்தாள் தேர்வு நடப்பதற்கு சுமார் 48 மணி நேரத்துக்கு முன் கசிந்ததாகவும், டார்க் வெப் மற்றும் என்கிரிப்ட் செய்யப்பட்ட சமூக வலைதளங்களில் ரூ.6 லட்சத்துக்கு அது விற்பனை செய்யப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் தேசிய தேர்வு முகமையின் தலைமை பொறுப்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours