புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து எம்.பி.க்கள் பேரணியாக புதிய கட்டிடத்துக்குச் சென்று அமர்வில் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் பழைய கட்டிடத்தில் இன்று தொடங்கியது. அப்போது, கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்றம் கடந்து வந்த பாதை, பிரதமர்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில், பழைய நாடாளுமன்றத்தில் இன்று கடைசி கூட்டம் நடைபெற்றது. இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்கப்படுவதாகவும், இந்தப் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் முத்தலாக் மசோதா உட்பட முக்கியத்துவம் வாய்ந்த பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
எம்.பிக்கள் பலரும் தங்கள் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு பழைய நாடாளுமன்றத்தில் இருந்து பிரியாவிடை பெற்றனர். பின்னர், எம்.பிக்கள் பிரதமர் மோடி தலைமையில் பழைய நாடாளுமன்றத்தில் இருந்து புதிய நாடாளுமன்றத்துக்கு பேரணியாகச் சென்று மக்களவை, மாநிலங்களவை அமர்வில் பங்கேற்றனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் எம்.பிக்களை வரவேற்றனர்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து விடைபெறும் பிரதமர் மோடி உள்ளிட்டோர்
பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து விடைபெறும் பிரதமர் மோடி உள்ளிட்டோர்
புதிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை வரவேற்று பிரதமர் மோடி பேசினார். அவர், ‘‘இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். புதிய நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வளமான எதிர்காலம் துவங்கி உள்ளது. கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறி சொல்ல வேண்டும். கொள்கைகள் வெவ்வேறாக இருக்கலாம். நமது குறிக்கோள் தேசத்தை முன்னேற்றி செல்ல வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் செங்கோல் இங்குள்ளது. நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பது பெருமை மிக்கது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை உருவாக்கிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அவர்களது உழைப்பை வணங்கி 140 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுன் பேசினார்.
மோடி பேசும்போது, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் இனி ‘அரசியல் சாசன மாளிகை’ (சம்விதான் சதன்) என்று அழைக்க பரிந்துரைத்தார். அதை ஏற்று பழைய கட்டிடத்துக்கு ‘அரசியல் சாசன மாளிகை’ என்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு ‘இந்திய நாடாளுமன்ற மாளிகை’ என்றும் பெயர் சூட்டப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours