ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சமஊதியம் – பினராயி விஜயன் !

Spread the love

பணியிடங்களில் பாலின தணிக்கை நடத்தப்படும் என்றும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில், ‘முதலமைச்சருடன் நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் பெண்களுடன் முதல்வர் பினராயி விஜயன் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சமீப காலம் வரை பெண்களின் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் பணிகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது உணர்த்தப்பட வேண்டும். வேலைகள் பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இதற்காக, பணியிடங்களில் பாலின தணிக்கை நடத்தப்பட்டு, சம ஊதியம் உறுதி செய்யப்படும்.

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து, மாநில பல்கலைக்கழகங்களிலும் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் கேரளா, நாட்டில் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது. 1997ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக பெண்களுக்கு தனியாக பாலின (ஜெண்டர்) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதிக பெண்கள் உயர்கல்வி பயிலும் மாநிலத்தில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலங்கள் வரிசையிலும் முதலிடத்துக்கு வரவேண்டும். கேரளாவில், பாலின பட்ஜெட் இந்த ஆண்டு மொத்த பட்ஜெட்டில் 21.5 சதவீதமாக உள்ளது. 2017-18 முதல் ஆண்டுதோறும் பாலின பட்ஜெட் மாநில பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட புதிய தொழில் நிறுவனங்களில் (ஸ்டார்ட்அப்) 40 சதவீத தொழில்முனைவோர் பெண்களாவர். மேலும் புதிதாக துவங்கப்படும் தொழில் துறையில் ரூ.8,000 கோடி முதலீட்டில் ரூ.1,500 கோடி முதலீடு பெண் தொழில்முனைவோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமூக முன்னேற்றமடைய பெண்களுக்கு நிதி சுதந்திரம் தேவை” இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours