ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

Spread the love

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி ரூ.71 கோடி மதிப்புள்ள பணம், நகை, போதைப்பொருட்கள், குக்கர், சேலை, மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் மே 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம், மதுபானம், பரிசுப்பொருட்கள், போதைப்பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து மாநிலம் முழுவதும் ரொக்கம், நகைகள், மதுபானம் உள்ளிட்ட பிறபொருட்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அவர்களுடன் காவல் துறை, வருமான வரித்துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தெலங்கானாவில் இதுவரை பணம், தங்கம், மதுபானம் மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.71.73 கோடியை எட்டியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் ரூ.29.31 கோடி ரொக்கத்தை கைப்பற்றியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் ரூ.12.35 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 9.54 கோடி மதிப்பிலான 3.62 லட்சம் லிட்டர் மதுபானங்களை அமலாக்கத் துறையினர் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். முந்தைய வாரத்தில் ரூ.6.2 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலத்தில் இதுவரை ரூ.15.49 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, ஆபரணங்களின் மதிப்பு ரூ.10.33 கோடியாகும். மேலும் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் மடிக்கணினி, குக்கர், சேலை போன்ற இலவச பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7.04 கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours