இந்தியாவுக்கு உரிமை இல்லை… பாகிஸ்தான் !

Spread the love

கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.

அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட திருத்தம் 370ஐ ரத்து செய்து இரு மாநிலங்களாக பிரித்த குடியரசு தலைவர் உத்தரவு செல்லும் என்றும், 2024 செப்டம்பர் மாதத்திற்குள் இரு மாநிலத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தேர்தல் முடிந்த பிறகு அதிகாரபூர்வமாக இரு மாநிலங்களை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி கூறுகையில், “சர்வதேச சட்டத்தை கடந்த 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தியா ஒருதலைப்பட்சமாக, சட்டவிரோதமாக சட்டப்பிரிவு 370ஐ நீக்கியுள்ளது. சர்வதேச சட்டத்திற்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எந்த சட்டப்பூர்வ மதிப்பும் இல்லை. காஷ்மீரிகளுக்கான உரிமையை பறிக்க முடியாது. ஜம்மு காஷ்மீரின் நிலை குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை என தெரிவித்தார்.

இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து இருப்பது நீதியின் கேலிக்கூத்து. ஜம்மு-காஷ்மீரின் இறுதி நிலைப்பாடு தொடர்புடைய முடிவுகளை ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படியும், காஷ்மீரிகளின் அபிலாஷைகளின் கருத்துபடியும் முடிவெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், “ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்திய அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை. உள்நாட்டு சட்டம் மற்றும் நீதித்துறை தீர்ப்புகளை காரணம் காட்டி இந்தியா தனது சர்வதேச கடமைகளை கைவிட முடியாது என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி தனியார் செய்தி நிறுவனத்திற்கு கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours