பிப்.26ல் பிரச்சாரத்தை தொடங்குகிறது திமுக!

Spread the love

பிப்ரவரி 26 ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை நடத்த உள்ளதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 72 மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், 234 தொகுதி பார்வையாளர்கள், முக்கிய நிர்வாகிகள் காணொலி வாயிலாக இதில் பங்கேற்றனர். மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிப்ரவரி 26 முதல் ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக செல்லும் பரப்பரை ஆரம்பமாகும். பாஜக அரசின் அநீதிகள், திமுக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை திமுகவிலும், அரசிலும் எதிர்பார்க்கலாம். மக்களவைத் தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. திமுகவின் அடிமட்ட தொண்டர்களின் செயல்பாடு வரை தலைமைக்கு தெரியும். 4000-க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையில் முக்கியமான கோரிக்கைகள் சேர்க்கப்படும். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும், அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் கிட்டத்தட்ட முடித்து விட்ட திமுக, தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் நடத்தி அதில் மாவட்ட செயலாளர்கள் செயலாற்ற வேண்டிய விதம் குறித்து அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்சியாக பிப்ரவரி 26 ல் பிரச்சாரத்தையும் திமுக தொடங்கிவிட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours