மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது இந்தியா கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 16-ஐ உத்தேச தேர்தல் தேதியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அமைத்துள்ள இந்தியா கூட்டணி, தொடக்கத்தில் இருந்தே ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது.
இந்நிலையில், கூட்டணியை மேலும் பலமிழக்கச் செய்யும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களிடையே பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று பலமுறை தெரிவித்துள்ளதாக கூறிய அவர், நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்த கவலை தனக்கு கவலை இல்லை என்றார். அதேநேரம், திரிணாமூல் கட்சி மதச்சார்ப்பற்ற கட்சி என்றும், பாஜகவை தனித்தே எதிர்கொண்டு வீழ்த்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை குறித்து தனக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்றார். அதோடு, கூட்டணியில் உள்ள ஒரு தலைவராக தனக்கு அவர்கள் மரியாதை நிமித்தமாக அந்த யாத்திரை குறித்து தெரிவித்திருக்க வேண்டும் என்றார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்திற்குள் எந்த கூட்டணியும் இல்லை என்றார்.
மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்குவங்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க அவர் விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
ஏற்கனவே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் உள்ளார். அதேபோல், ஆம் ஆத்மியுடன், பஞ்சாப்பில் கூட்டணி அமைப்பதற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்ற வாதத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours