ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் 6-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப்புக்கு ஷிகர் தவான் – ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தது. நிதானமாக ஆடிக்கொண்டிருந்த இந்த பாட்னர்ஷிப்பை 3வது ஓவரில் முஹம்மது சிராஜ் பிரித்தார். பேர்ஸ்டோவ் 8 ரன்களில் அவுட்.
அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங், தவானுடன் கைகோத்தார். ஆனால் அவரும் நிலைக்காமல் க்ளென் மேக்ஸ்வெல் வீசிய 9வது ஓவரில் கேட்ச் கொடுத்து 25 ரன்களுடன் வெளியேறினார். 11 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 92 ரன்களை சேர்த்திருந்தது.
தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து நம்பிக்கையூட்டினாலும், 17 ரன்களில் அவுட்டாகி கிளம்பினார். அவர் போன அடுத்த ஓவரில் நிலைத்து ஆடிய தவான் 45 ரன்களில் விக்கெட்டானார். ஆர்சிபி பந்துவீச்சில் பஞ்சாப் தடுமாறிக்கொண்டிருந்தது.
கடந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய சாம் கரன் – ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார். ஜிதேஷ் சர்மாவின் 2 சிக்சர்ஸ் அணிக்கு தேவையாக இருந்தது. ஆனால், சாம் கரன் இந்த முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. யஷ் தயாள் வீசிய 18வது ஓவரில் 23 ரன்களை மட்டுமே சேர்த்துவிட்டு பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து ஜிதேஷ் சர்மாவும் 27 ரன்களில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். கடைசி ஓவரில் ஷஷாங்க் சிங் இறங்கி 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரியை விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் 176 ரன்களைச் சேர்த்தது. ஷஷாங்க் சிங் 8 பந்துக்கு 21 ரன்களுடனும், ஹர்ப்ரீத் ப்ரார் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பெங்களூரு அணி தரப்பில் முஹம்மது சிராஜ், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், யஷ் தயாள், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
+ There are no comments
Add yours