இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. லீக் போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால். லீக் போட்டியில் இந்திய அணியிடம் மரண அடி வாங்கிய ஆஸ்திரேலியா அணி அதற்கு பழி தீர்த்தது.
இது இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பிசிசிஐக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, உடனே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்த அறிக்கையை பிசிசிஐ கேட்டது. அதற்கு பதில் அளித்த டிராவிட், ஸ்பின்னர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட் விழாத காரணத்தால் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
9 லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் ஸ்பின்னர்களின் சிறப்பான பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும், ஆனால் இறுதிப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு மைதானம் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை சுழற்பந்துவீச்சுக்கு மைதானம் ஒத்துழைத்திருக்கும்பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்றும் ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு கொடுத்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களாக குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இதுவே அணியின் தோல்விக்கு காரணம் என சூசகமாக கூறியிருப்பதால் உலகக் கோப்பை கிடைக்காமல் போனதற்கான முழு பழியும் இப்போது மைதானத்தின் மீதும், ஜடேஜா மற்றும் குல்தீப் மீதும் விழுந்துள்ளது.
உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் இந்திய அணிக்கான பயிற்சியாளர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் அவரின் பணியில் திருப்தியாக இருப்பதால் அடுத்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பை வரை பயிற்சியாளர் பதவியை தொடருமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டிருக்கிறது. அவருடன் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆகியோருடைய ஒப்பந்தமும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours