கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Spread the love

கோவிட் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு ’கோவிட் பணி’ சான்று வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில், 1021 மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 2022 அக்டோபர் 11-ல் அறிவிப்பாணை வெளியிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பணியாற்றிய மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், அதற்கு கோவிட் பணிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தாங்களும் கொரோனா காலத்தில் பணியாற்றியதாகக் கூறி, பாரபட்சமான இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தனியார் மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல கொரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு கோவிட் பணிச் சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில், கொரோனா காலகட்டத்தில் 84 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற்றனர், தனியார் மருத்துவர்கள் கொரோனா பணியாற்றினார்களா என சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை, தனியார் மருத்துவர்களும் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை பொறுத்தவரை, 36 மாதங்கள் பணியாற்றிய காலத்தை பயிற்சி காலமாகத்தான் கருத முடியும் என்பதால், அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க முடியாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவர்கள் வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் முடிவில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

கொரோன காலத்தில் தனியார் மருத்துவர்களின் சேவையும் பாராட்டும் வகையில் இருந்தாலும், அவர்கள் கொரோனா பணியாற்றினார்களா என சரிபார்க்க நடைமுறை ஏதும் இல்லை என்பதாலும், ஆதாரங்களை சமர்ப்பிக்க வில்லை என்பதாலும், அரசின் முடிவு அரசியலமைப்பு விதிகளை மீறியது ஆகாது எனக் கூறி, தனியார் மருத்துவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பயிற்சி மருத்துவர்களும் அரசு மருத்துவர்களுக்கு இணையாக பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி அமர்வு, உயிரையே துச்சமாக மதித்து பணியாற்றிய அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ளனர்.

பயிற்சிமருத்துவர்கள் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி கோவிட் பணிசான்றிதழ் கோரலாம் எனவும், அடுத்த 5 நாட்களில் அந்த சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours