மதுரையில் சாலை பணிக்காக சென்ற ரோடு ரோலர் வாகனம் திடீரென கடைகளுக்குள் புகுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் பகுதியில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகளில் மேடு பள்ளங்களை நிரவும் பணிக்காக ரோடு ரோலர் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், பழங்காநத்தம் பிரதான சாலையின் ஒரத்தில் இருந்த கடைகளுக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் கடையின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் சேதமடைந்தன. ரோடு ரோலர் திடிரென கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்ததை பார்த்துவிட்டு அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கடையில் உள்ளவர்கள் அலறியடித்து ஓடினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரோடு ரோலர் ஓட்டுநர் செந்திலை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முதல் முறையாக இன்று தான் செந்தில், ரோடு ரோலர் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதைக்கேட்டு மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சாலையில் ஏராளமான பெண்கள் மற்றும் பள்ளி – கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர். அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கர்ப்பிணிகளும் வந்து செல்கின்றனர்.
ஓட்டுநரின் கவனக் குறைவால் ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுபோன்ற அரசு ஒப்பந்த பணிகளின் போது முறையான அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+ There are no comments
Add yours