தூத்துக்குடி துப்பாக்கிசூடு: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Spread the love

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கியுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதேசமயம், தமிழக அரசின் உத்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு, தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது ஆணையம். இதில், சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரையும் செய்யப்பட்டது. இந்த சூழலில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கியுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்திரம் கூறுகையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை துவங்கியுள்ளது. அதன்படி, அப்போதைய ஆட்சியர் வெங்கடேஷ், தென்மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட 17 காவல் அதிகாரிகள், 3 வருவாய் துறை அதிகாரிகள் என மொத்தம் 21 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.

ஒரு காவல் அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே, மற்ற காவல் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பி, 21 பேருக்கு எதிரான குற்றசாட்டுகள் என்ன? துப்பாக்கிசூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை முடித்து வைத்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours