நீலகிரியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இன்று 0 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதையடுத்து அங்கு கடும் குளிர் வாட்டி வதைப்பதால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கிறது.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக, நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிப்படியாக உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு, தொடர் மழை காரணமாக பனிப்பொழிவு தாமதமாக துவங்கிது. இதனால் பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது.
இப்போது உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி வீசுகிறது. இதன் காரணமாக, உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் மீது பனி உறைந்து பனி கட்டிகளாக மாறிவிடுகிறது. குறிப்பாக, உதகை நகர், தலைகுந்தா, எச்பிஎஃப், காந்தள் , ஃபிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் உறைபனி புள்வெளிகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல படிந்து நிற்கிறது.
இதனால் உதகையின் பல பகுதிகள் காலை நேரத்தில் மினி காஷ்மீர் போல காட்சியளிக்கிறது. இன்று காலை உதகையில் கடுங்குளிர் நிலவியது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலையாக சான்டினல்லா பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இனி வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours