பல உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக முதலமைச்சர் பதிவு.
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) உடல்நல குறைவு முதிர்வு காரணமாக இன்று காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி பாத்திமா பீவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
1927ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டமும், பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். எனவே, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நீதிபதி பாத்திமா பீவி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவருமான பாத்திமா பீவி அவர்கள் மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.
உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours