சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை வருகிற 26-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அமைந்துள்ளது. கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக பேரவை விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் பேசிய அவர், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நவீன விளக்கப்படங்களுடன் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இதன் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், பணிகள் தற்போது முழுமை பெற்றுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 26-ம் தேதி கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours