சென்னை: சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அறநிலையத்துறை சார்பில் மணப்பெண்ணிற்கு 4 கிராம் எடையுள்ள தங்கத்தாலி. தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், திருமண விழாவிற்கு தலைமையேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார் . அதில்..
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் வல்லுநர் குழு அமைத்தோம். 3 ஆண்டுகளில் 2226 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியுள்ளோம். 10238 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 9000 கோயில்களில் பணி நடைபெற்று வருகின்றன. நன்கொடையாளர்கள் அளித்த ரூ.1103 கோடியை கொண்டு 9,163 கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருகின்றது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.6792 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டுள்ளோம். 17000 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டது.
9 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 720 கோயில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.257 கோடி மதிப்புள்ள 442 கிலோ சுத்த தங்கம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் கிடைக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை திமுக அரசுதான் செயல்படுத்தியது. சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏறி தரிசிக்கும் உரிமையை நிலைநாட்டும் தீர்ப்பை பெற்றதால் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.1000 ஆண்டு பழமைான கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1000 ஆண்டு பழமையான 2724 கோயில்களில் ரூ.426.62 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊர்க் கோயில்கள் தொடர்பான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். கோயில்கள் தொடர்பான திமுக அரசின் நடவடிக்கைகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அரசை விமர்சிக்கின்றனர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துவர்களால் திமுக அரசின் நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என்று அவர் உரையாற்றினார்.
+ There are no comments
Add yours