ஆம்ஸ்ட்ராங் படுகொலை- சிபிஐ விசாரணை கோரி ஆதரவாளர்கள் சாலை மறியல் !

Spread the love

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான காலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தடைபட்டுள்ளது.

உடற்கூராய்வு முடிந்தும் ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிரமம், ரயில் நிலையத்துக்கு செல்வோருக்கு சிரமம் எனப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதால் போலீஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டளனர். பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாததால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மருத்துவமனை வந்தார்.

பழிக்குப் பழி கொலையா?- ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழி தீர்க்க இந்தப் படுகொலை நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவு: இதற்கிடையில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து பாதிப்பு: இருப்பினும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள், உறவினர்கள் சமாதானம் அடையாமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் பரபரப்பான காலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து அரை மணி நேரத்துக்கும் மேலாக தடைபட்டுள்ளது. மாற்றுவழியில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. போலீஸார் ஆம்ஸ்ட்ராங்க் ஆதரவாளர்களுடன் சமாதானப் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.

வைரலாகும் வீடியோ காட்சிகள்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிச்செல்லும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 10 தனிப் படைகளை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிச்செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதை அடிப்படையாக வைத்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours